ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியீடு!

ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியீடு!

Share it if you like it

மதுரையில் ஆர்.எஸ்.எஸ். காரியகர்த்தா வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சி.சி.டி.வி. கேமரா வீடியோ காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) மற்றும் எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் மீது பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டுதல், இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத பயிற்சி அளித்தல், நாட்டுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, தேசிய புலனாய்வு முகமை அமைப்பு (என்.ஐ.ஏ.) ஆங்காங்கே சோதனை நடத்தி, அவ்வப்போது சிலரை கைது செய்து வந்தது. அதேசமயம், பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவை இஸ்லாமிய நாடாக்க பி.எஃப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட சில இஸ்லாமிய அமைப்புகள் முயற்சி செய்து வருவதாகவும் தகவல் வெளியானது. இதை மெய்ப்பிக்கும் வகையில், 2047-ல் இந்தியா இஸ்லாமிய நாடாகும் என்று கேரளாவில் பி.எஃப்.ஐ. அமைப்பினர் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்பினரிடம் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கான சதித்திட்டங்கள் அடங்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள் பி.எஃப்.ஐ. அமைப்பினரை கடந்த சில மாதங்களாகவே தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 93 இடங்களில் 100-க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. டீம் கடந்த 21-ம் தேதி மாஸ் ரெய்டில் ஈடுபட்டது. இந்த ரெய்டில் வாக்கி டாக்கி, வயர்லெஸ் போன்கள், ஆயுதங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், இது தொடர்பாக 45 பேரை கைது செய்தனர். இதனிடையே, இந்த ரெய்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பி.எஃப்.ஐ. சார்பில் போராட்டம் நடைபெற்றது. கேரளாவில் நடந்த போராட்டத்தில் கடைகள், பஸ்களை பி.எஃப்.ஐ. அமைப்பினர் சூறையாடினர். மகாராஷ்டிராவில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினர். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகளை வீசியது பி.எஃப்.ஐ. கும்பல்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடந்த இந்த பெட்ரோல் குண்டு வீச்சில், ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் கார்கள், பைக்குகள், கடைகள் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின. இதேபோல, மதுரையிலும் ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்த வகையில், மதுரை அனுப்பானடி பகுதியிலுள்ள ஆர்.எஸ்.எஸ். காரியகர்த்தா கிருஷ்ணன் வீட்டிலும் நேற்று இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில், அவரது கார், பைக் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின. இவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசும் காட்சிகள்தான் தற்போது வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு நபர் கையில் பெட்ரோல் குண்டுடன் வருகிறான். கிருஷ்ணன் வீட்டு கேட்டை நெருங்கியவுடன் கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசுகிறான். பிறகு, அவனுக்கு பின்னால் பைக்கில் வந்துகொண்டிருக்கும் நபரின் பைக்கில் ஏறி சிட்டாக பறந்து விடுகிறான். அவன் பெட்ரோல் குண்டு வீசுவதை, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த பெண், மிரட்சியுடன் பார்க்கிறார். கிருஷ்ணனின் எதிர் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் இக்காட்சிகள் அனைத்தும் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது.


Share it if you like it